நடிகர் விஜயும் சர்ச்சை அரசியலும்
தமிழ் திரைப்பட
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவரது ஒவ்வொரு படத்திலும்
அரசியலை முன்நிறத்தியுள்ளார். அரசியல் வசனங்கள் அதிரும். தனது அரசியல் ஆர்வத்தால் முன்னாள்
முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிடம் நெருக்கம் காட்டினார். தனது அரசியல் ஆர்வத்திற்கு ஏற்ப தனது மகன் நடிகர் விஜயையும்
வார்த்து வடித்தார்.
ஒரு கால கட்டத்தில்
நடிகர் விஜய் தனக்கென தனி ரூட்டை போட்டுக் கொண்டு, தனது தந்தையை அவரது பாதையில் விட்டு
விலகிச் சென்றார். ஆனால், நடிகர் விஜய் தனது உச்ச நட்சத்திரமாக இருப்பதால், அரசியல்
களத்தில் தானும் ஒரு தலைவனாவோம் என நினைத்து
அதற்கேற்ப தனது கதை களத்தையும் அமைத்துக் கொண்டார்.
இன்று தமிழ்நாட்டில்
நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தைப் போல நடிகர் விஜய்க்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டம்
இருப்பதால், தன்னால் அரசியலின் உச்சத்தை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த
ரசிகர் கூட்டத்தின் முன் அவர் ஒரு அரசியல் தலைவராக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அடுத்த
முதலமைச்சர் என அவரது ரசிகர்களை வைத்து சொல்ல வைத்தார்.
ஆனால் லியோ படம் தொடர்பான சர்ச்சைகள் திமுகவை சுற்றி ஒரு தரப்பினரால் முன் வைக்கப்பட்டது. இது தனது அரசியல் முன்னெடுப்பிற்கு சாதகமாக இருக்கம் என எண்ணி நடிகர் விஜயும் தற்போது வரை அமைதி காத்து வருகிறார். ஆனால் அவரது திரையுலகம் சார்ந்தவர்களே இதை மறுத்து பேசும் நிலையை உருவாக்கினார்.
நடிகர் விஜயின் படங்கள் சர்ச்சைக்கும், பிரச்னைக்கும் உள்ளாவது இன்று மட்டும் நடந்தது அல்ல. நீண்டகாலமாக தொடர்ந்து நடக்கும் ஒன்று தான். 2003ல் கீதை திரைப்படம் புதிய கீதையாக மாறியது முதல் இன்று லியோ வரை நடந்துவரும் சம்பிரதாயங்கள் தான். இந்த சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட திரைப்பட தயாரிப்பு தரப்பால் படத்தை பிரோமோட் செய்யும் வகையில் வேண்டுமென்றே சர்ச்சைகள் உருவாக்கப் படுவதாகவும் இன்று வரை ஒரு வாதமும் உண்டு.
சுறா படத்தின் தோல்வி காவலன் படத்தை வெளியிட
நஷ்டஈடு கொடுக்கும் அளவுக்கு சென்றது. துப்பாக்கி படத்தை நீதிமன்றம் சென்று தான் திரையிடும்
நிலை ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சில காட்சிகள் நீக்கப்பட்டும், மியூட் செய்தும்
தான் வெளியானது. இது நாள் வரை நடிகர் விஜய் தன்னை அதிமுக ஆதரவாளராகவே காட்டி வந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் கடந்த 2013ல் தலைவா திரைப்படம் வெளியானது. வெடிகுண்டு மிரட்டல்
கடிதத்தால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய
அதிமுக அரசு தலைவா படத்தை வெளியிட தடை விதித்தது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை படக்குழுவினர்
சந்திப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளுக்கு பிறகே படம்
வெளியானது. இந்த பட பிரச்னையை அதிமுகவிற்கும், அவர்களது ஆதரவாளருக்கும் இடையே நடக்கும்
பிரச்னையாகத்தான் பலரும் பார்த்தனர். 2014ல் கத்தி திரைப்படம் ராஜபக்சே ஆதரவாளரால்
தயாரிக்கப்படுவதாகவும், மற்றொருவரின் கதை திருடப்பட்டதாகவும் பிரச்னை எழுந்தது. புலி
படம் வெளியான 2015ல் வருமான வரித்துறை சோதனையை நடிகர் விஜய் எதிர்கொண்டார். பகல் காட்சிகள்
மட்டுமே திரையிடப்பட்டது. 2016ல் தெறி படம் வெளியான போது தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும்
இடையே பிரச்னை எழுந்தது. பல மாவட்டங்களிலும், முக்கிய தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகவில்லை.
2017ல் மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றம் ஜிஎஸ்டி வரி குறித்த வசனங்கள் அப்போதைய பாஜ தலைவர் தமிழிசை மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரின் கடும் எதிர்ப்பு மட்டுமின்றி அரசு மருத்துவர்கள் மற்றும் கர்நாடகத்திலும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை சென்சார் சான்று வழங்கப்படவில்லை.
2018ல் வெளியான சர்க்கார் படமும் தன் கதையை சார்ந்திருப்பதாக
எழுந்த பிரச்னை கிரெடிட் கொடுப்பதாக கூறியதால் தீர்க்கப்பட்டது. அரசின் இலவசம் குறித்த
விவகாரத்தில் அதிமுகவினர் களத்தில் இறங்கி நடிகர் விஜய்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இதன் வெளியீட்டு விழாவிலும் விஜய் அரசியல் பேச தவறவில்லை. 2019ல் பிகில் ஆடியோ வெளியீட்டு
விழாவில் நடிகர் விஜயின் பேச்சு, அதிமுக மற்றும் பாஜகவினரின்ட எதிர்ப்பை சந்தித்தது.
2021ல் மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதுடன், அவர்களது
காரில் விஜய் அழைத்து செல்லப்பட்டார். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்தது
மிகப்பிரபலம்.
அப்போது கொரோனா
காலம் என்பதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக
நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில்
சந்தித்து 100 சதவீத அனுமதி கேட்டனர். ஆனால் அரசின் அறிவுறுத்தல் மற்றும் சமூக ஆர்வலர்கள்
எதிர்ப்பால் 50 சதவீத அனுமதி மட்டுமே கிடைத்தது. இந்த பட சர்ச்சை தொடர்பாக பாஜகவினர்
ஆர்ப்பாட்டமும், வழக்கம் போல கதை தழுவல் விவகாரமும் அரங்கேறியது.
அந்த வரிசையில்
தான் தற்போது லியோ படமும் இணைந்துள்ளது. ஆனால், துரதிஷ்டம் என்னவென்றால் நடிகர் விஜயின்
அரசியல் முன்னெடுப்பிற்காக இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களால்
ஆளும் திமுக அரசிற்கு எதிரானதாக கொண்டு செல்லப்படுகிறது. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு
வரலாம். இதை யாரும் தடுக்க முடியாது, தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதுநாள் வரை
நடிகர் விஜய் அதிமுக ஆதரவாளராகவே இருந்து வந்தார். முதலில் பாஜகவின் எதிர்ப்பும், தற்போது
அவரகளின் மறைமுக ஆதரவும் இருப்பது தெரிகிறது.
இந்த தமிழ்நாடு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி முதல் டிஆர், பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், கமல் வரை பலரை சந்தித்துள்ளது. அந்த வரிசையில் முதல்வர் நாற்காலி பந்தயத்தில் நடிகர் விஜயையும் பார்க்க தயாராகவே உள்ளது. வாருங்கள், உங்கள் ரசிகர்களுக்கு வன்முறையற்ற, நாகரீக அரசியலை கற்று கொடுங்கள், அடுத்தாண்டு தேர்தல் களத்தில் சந்திப்போம், அதற்கு முன்பும், பின்பும் சிந்தித்து, சிந்திக்க வைப்போம் ………….